Saturday, February 26, 2011

மனசாட்சியின் அழுகை...


விட்டுக்கொடுத்தல், வளைந்துகொடுத்தல், சகித்துக்கொள்ளுதல்...
இவைதான் வாழ்க்கையின் நெறிமுறையா??

உண்மையுடனும், உணர்வுடனும், ஒழுக்கமாய் வாழ நினைக்கிறேன்..
ஆம்...வாழ விரும்புகிறேன்.. நடிக்க அல்ல..

போட்டி போட்டு நடிக்கும் இம்மனிதர்களின் நடுவில் என்னையும் தொலைத்துவிட்டு தேடுகிறேன்...
மனிதன் தனி ஆள் தான். ஆனால் அவன் ஒரு சார்புப்பிராணி.. அதில் தவறேதும் இல்லை..
ஆனால் உணர்வுகளை புதைத்துவிட்டு வெறும் சடலமாய் கூடி வாழும் சார்புப்பிராணியாய் நான் வாழ விரும்பவில்லை..

மாறாக் கொள்ளையுடன் வாழ விரும்பும் என்னை, மாற்றங்கள் புதைக்கின்றன உயிருடன்..
மாற்றத்தை விரும்புபவள் தான் நான்.. ஆனால் மாற்றத்தை மட்டுமே அல்ல..தொடர் மாற்றங்கள் தொலைத்துவிடும் நிஜங்களை..
உணர்வாயா நீ என் உணர்வுகளை...??


Wednesday, February 23, 2011

அம்மாவிற்கு கடிதம்..



ஊருக்கு போகும்போதும், படிக்க, வேலை பார்க்க வெளியே செல்லும் போதும் அம்மா சொல்வாள்... "போனதும் கடுதாசி போடப்பா"...

"முகவரி இருந்தபோது கடிதம் போடமனமில்லை..
மனமிருந்த போது தாயின் முகவரி இல்லை.."

எனவே அம்மா உள்ளவர்களே, இருக்கும்வரை வாழ வையுங்கள்.. நீங்கள் வாழ்வீர்கள்..

Tuesday, February 22, 2011

விரல்...


சின்னஞ்சிறு வயதில் என் பிஞ்சு விரல் பிடித்து நடை பழக்கிய அன்னை,

என் சின்ன விரல்களை பிடித்து எழுத கற்றுக்கொடுத்த அக்கா,

நான் தேர்வில் தேறியதற்கு என் விரலில் மோதிரம் அணிவித்த மாமா,

அரும்பு மீசை வளர்ந்த விடலை பருவத்திலும் என் விரல் பிடித்து இழுத்து மடியில் சாய்த்து முத்தம் கொடுத்த அத்தை,

வெளியூர் செல்லும் போது கேட்காமலே விரலில் பணம் நுழைக்கும் அண்ணன்,

பண்டிகையின் போது எங்கிருந்தாலும் தேடிப்பிடித்து விரலால் திருநீறு பூசும் பாட்டி,


இவர்கள் அனைவரின் முன்பும் விரல் நீட்டி வீட்டை விட்டு வெளியேற சொன்னார் அப்பா...
என் காதலியை அவர்களின் சம்மதமின்றி மணம் முடித்து விரல் பிடித்து வீட்டில் நுழைந்ததற்கு....